Colombo (News 1st) அரசாங்கம் செல்வந்தர்களுக்கு நிவாரணங்களையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுத்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க இன்று (23) பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, பாராளுமன்றத்தில் தனது முதலாவது உரையை நிகழ்த்திய போதே இதனை குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் ஈடுபடுவதே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு இருக்கும் ஒரே வழி என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
2019 ஆம் ஆண்டு இலங்கையின் வௌிநாட்டு கையிருப்பில் 700 கோடி டொலர் இருந்ததாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, கையிருப்பு தற்போது 400 கோடி டொலர் வரை குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த வருட இறுதியில் 100 கோடி டொலர் கடனை நாடு செலுத்த வேண்டியுள்ளதாகவும் இன்னும் 200 கோடி டொலர் செலுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் 78 கோடி டொலரை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். அது இந்த வருடம் கிடைக்குமா, அடுத்த வருடம் கிடைக்குமா என எமக்கு தெரியாது. Swap ஊடாக 40 கோடி டொலர் கிடைக்கும், பங்களாதேஷிலிருந்து 20 கோடி கிடைக்கும். இதனை கொண்டு நாம் எவ்வாறு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும், வரலாறு தொடர்பில் கதைக்க முடியவில்லை. நாம் எவ்வாறு இதிலிருந்து மீள்வது. சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வதே எமக்கு இருக்கும் ஒரே வழிமுறையாகும். 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை அது இடம்பெற்றது. நீங்கள் அதற்கு இணங்காவிட்டால் உங்களது மாற்றுத் திட்டத்தை எமக்கு கூறுங்கள். மாற்றுத் திட்டம் இல்லாமல் தரவுகள் குறித்து கதைப்பதில் பலனில்லை. கொரோனா, எரிபொருள், கல்வி உள்ளிட்ட பல பிரச்சினைகள் நாட்டில் உள்ளன. இவை அனைத்தும் வலுவடைந்தால் நாம் என்ன செய்வது?
என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.