பொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் மரணம்: ஐ.நா அவதானம்

இலங்கையில் பொலிஸாரின் பொறுப்பில் உள்ளவர்கள் உயிரிழக்கின்றமை தொடர்பில் ஐ.நா அவதானம்

by Staff Writer 21-06-2021 | 10:48 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலட் இலங்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
தற்போது அமுலிலுள்ள சட்டத்திற்கமைய, சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், தன்னிச்சையாக இரண்டு வருடங்களுக்கு ஒருவரைத் தடுத்து வைக்க முடியும். அத்துடன், பொலிஸ் பொறுப்பிலுள்ளவர்கள் உயிரிழக்கின்றமை தொடர்பிலும், பொலிஸாருக்கும் குற்றங்களுடன் தொடர்புடைய குழுக்களுக்கும் இடையிலான மோதல்களில் உயிரிழப்புகள் பதிவாகின்றமை தொடர்பிலும் நான் அறிந்துள்ளேன். அது தொடர்பில் உடனடியாக முழுமையான மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விடயம் குறித்து அரசாங்கத்துடன் இணைந்து நாம் தொடர்ச்சியாக செயற்படுவோம். எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பான முன்னேற்றம் குறித்து நான் பேரவைக்குத் தெரிவிப்பேன்.