Colombo (News 1st) தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் COVID தொற்றுக்குள்ளான தோர் எனும் சிங்கத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவின் மத்திய மிருகக்காட்சி சாலை அதிகார சபையின் ஒத்துழைப்பை இலங்கை கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிங்கத்திற்கு வெளிப்புறமாக ஒக்சிஜன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சிங்கத்திற்கு எவ்வாறு கொரோனா தொற்றியது என்பதை உறுதி செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் தெரிவித்தது.
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
ஏனைய விலங்குகளின் மாதிரிகளைப் பெற்று அவற்றின் நிலை குறித்து பரிசோதனைகளை நடத்துவதற்கு மிருகக்காட்சி சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உண்மையில் தொற்றுக்குள்ளான ஊழியரோ, அதிகாரியோ சிங்கத்தின் அருகில் இருந்ததன் காரணமாகவே இந்த தொற்று பரவியுள்ளது என்றே தற்போது நினைக்க வேண்டியுள்ளது.