உயிரிழந்த இளைஞரின் சடலம் மீது உடற்கூற்று பரிசோதனை

கைதாகி உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞரின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

by Bella Dalima 18-06-2021 | 4:19 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்கு பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருதயபுரத்தை சேர்ந்த 21 வயதான சந்திரன் விதுஷன் என்பவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த போது உயிரிழந்தார். அதிக போதைப்பொருள் பாவனையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பொலிஸாரின் தாக்குதல் காரணமாக சந்திரன் விதுஷன் உயிரிழந்ததாகவும் அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அவரின் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.