சமையல் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

விலையை அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை

by Bella Dalima 16-06-2021 | 10:37 PM
Colombo (News 1st) சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என லாஃப் மற்றும் லிட்ரோ கேஸ் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. லாஃப் நிறுவனம் 740 ரூபாவால் அதிகரிக்குமாறும் லிட்ரோ கேஸ் நிறுவனம் 670 ரூபாவால் விலையை அதிகரிக்குமாறும் கோரியுள்ளதாக எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எனினும், அவ்வாறு விலையை கூடுதலாக அதிகரிக்க முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 400 ரூபா வரை அதிகரிக்கலாம் என்ற யோசனையை நுகர்வோர் விவகார அதிகார சபை முன்வைத்துள்ளதாக மஹிந்த அமரவீர கூறினார். எவ்வாறாயினும், விலையை அதிகரிக்காதிருக்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதால், எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான சாத்தியம் தற்போது இல்லை என மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.