by Staff Writer 15-06-2021 | 10:22 PM
Colombo (News 1st) வவுனியா வாடி வீட்டின் முகாமையாளரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட வவுனியா நகர சபைத் தலைவர் இராசலிங்கம் கெளதமன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் இணக்க சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாடி வீட்டின் முகாமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இன்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
இதனைத் தவிர, வாடி வீட்டின் ஊழியர்கள் இருவருக்கு, நகர சபை தலைவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து நகர சபை தலைவர் இராசலிங்கம் கெளதமன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.