12% பேருக்கு தான் COVID தடுப்பூசி போடப்பட்டுள்ளது

உலக மக்கள் தொகையில் இதுவரை வெறும் 12% பேருக்கு தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

by Bella Dalima 15-06-2021 | 6:38 PM
Colombo (News 1st) உலக மக்கள் தொகையில் இதுவரை வெறும் 12% பேருக்குத்தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 93 கோடியே 20 இலட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதாவது, உலக நாடுகளில் ஜூன் 10 ஆம் திகதி நிலவரப்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, கொரோனாவுக்கு எதிரான பெரும்போரில் இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் இதுவரை 12 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இஸ்ரேலில் 63.1 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து கனடாவில் 62.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 13.7 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இது 51.4 சதவீதமாகவும், பிரிட்டனில் 62.7 சதவீதமாகவும் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஒரு நாளில் கொரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட மிக அதிக வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.