Colombo (News 1st) உயிரிழந்த டொல்பின் ஒன்றும் 05 கடலாமைகளும் சில பகுதிகளில் இன்றும் (14) கரையொதுங்கியுள்ளன.
சிலாபம், உடப்பு, உனுப்பிட்டிய பாரிபாடு, களுத்துறை, அளுத்கம, களுத்துறை வடக்கு ஆகிய கரையோரங்களில் இவற்றின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன.
கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலிலிருந்து வௌியேறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களால் கடலுயிர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் காணப்படுவதால் அவற்றிற்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு அறிவித்துள்ளது.
வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, கடலில் மூழ்கும் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 31 இற்கும் அதிகமான கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
அவற்றை தவிர 05 டொல்பின்களின் உடல்களும் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வௌ்ளவத்தை, தெஹிவளை, மொறட்டுவை, எகொட உயன, பாணந்துறை, கொஸ்கொட, இந்துருவ, காலி, உனவட்டுன, குடாவெல்ல, மாரவில மற்றும் துடாவெவ ஆகிய பகுதிகளில் இவை கரையொதுங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
