1758 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்

வெலிகம கடற்பிராந்தியத்தில் 1758 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றல்; 12 பேர் கைது

by Staff Writer 13-06-2021 | 3:30 PM
Colombo (News 1st) வெலிகம கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பு பிரிவினரால் சுமார் 219 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகின் உரிமையாளரும் படகுடன் தொலைபேசி கலந்துரையாடல்களில் ஈடுபட்ட மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், ஆழ்கடல் பகுதியில் ஈரானின் படகொன்றிலிருந்து இலங்கை கடத்தல்காரர்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 1758 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சாக்குகள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்தது. கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட நீண்டநாள் மீன்பிடியில் ஈடுபடும் படகொன்றும் டிங்கி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் வெலிகம, திக்வெல்ல, மிரிஸ்ஸ பகுதிகளை சேர்ந்த 26 முதல் 43 வயதுகளுக்கிடைப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.