மெக்ரோனின் கன்னத்தில் அறைந்தவருக்கு 4 மாத சிறை

பிரான்ஸ் அதிபர் மெக்ரோனின் கன்னத்தில் அறைந்த இளைஞருக்கு 4 மாத சிறைத்தண்டனை

by Bella Dalima 12-06-2021 | 4:18 PM
Colombo (News 1st) பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனின் கன்னத்தில் அறைந்த இளைஞருக்கு 4 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பாடசாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது‌‌ அவரை வரவேற்க பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க சென்றபோது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென அதிபர் மெக்ரோனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மெக்ரோனை கன்னத்தில் அறைந்த டேமியன் தாரெல் என்கிற இளைஞரையும் இந்த சம்பவத்தை தனது செல்போனில் படம் பிடித்த மற்றொரு நபரையும் பொலிஸார் கைது செய்தனர். இதற்கிடையே, அந்த இளைஞர் தனது கன்னத்தில் அறைந்த விடயத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என கூறிய‌ மெக்ரோன், தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என ‌ கூறியிருந்தார். இந்நிலையில், அதிபர் மெக்ரோனை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக டேமியன் தாரெலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அதிபரை கன்னத்தில் அறைந்ததை ஒப்புக்கொண்ட டேமியன் தாரெல், எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்ததாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள், அதில் 14 மாதங்களை இரத்து செய்துவிட்டு 4 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.