by Staff Writer 11-06-2021 | 11:03 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்பட்ட அந்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களும் நீதியரசர்களான எல்.டி.பி தெஹிதெனிய, பீ.பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த மனுக்களுடன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மிக முக்கியமான ஆவணங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியிருந்த போதிலும், அவை இதுவரை கிடைக்கவில்லையென மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபாயிஸ் முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
மனுதாரர் தரப்பினர் கோரும் ஆவணங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்தால், அடுத்த வாரத்திற்குள் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் இன்று மன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.