நாட்டில் COVID மரணங்கள் 2000-ஐ கடந்தன

நாட்டில் COVID மரணங்கள் 2000-ஐ கடந்தன; இன்று அதிகளவான மரணங்கள் பதிவு

by Staff Writer 11-06-2021 | 10:36 PM
Colombo (News 1st) நாட்டில் COVID மரணங்கள் 2000-ஐ கடந்துள்ளன. நாட்டில் அதிக COVID மரணங்கள் இன்று (11) அறிவிக்கப்பட்டன. இன்று 101 COVID மரணங்கள் அறிவிக்கப்பட்டன. அவர்களில் 30 பேர் வீடுகளில் மரணித்துள்ளதுடன், 14 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலைகளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். பெப்ரவரி 6 ஆம் திகதியில் இருந்து ஜூன் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. அதன்படி, நாட்டில் பதிவாகியுள்ள COVID மரணங்களின் எண்ணிக்கை 2011 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளும் குறைவடைந்துள்ளன. கடந்த மாதம் 20 ஆம் திகதி 26,567 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நேற்று 19,828 PCR பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய, நாளாந்தம் பதிவாகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவினைக் காண முடிகின்றது. கடந்த 20 ஆம் திகதி 26,567 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3,441 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 19,828 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களில் 2,715 COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த நிலையில், நாட்டில் இன்று 2,232 COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள COVID நோயாளர்களின் எண்ணிக்கை 2,18,366 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இன்று 1,852 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய, COVID தொற்றுக்குள்ளானவர்களில் 1,84,090 பேர் குணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்