படுத்துறங்கும் யானைகள்: வைரலான புகைப்படம்

படுத்துறங்கும் யானைகள்: சமூக வலைத்தளங்களில் வைரலான புகைப்படம்

by Bella Dalima 10-06-2021 | 6:12 PM
Colombo (News 1st) சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 15 யானைகள் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தன. வனப்பகுதிக்கு செல்லும் வழி தெரியாமல் ஊருக்குள் சுற்றித்திரிந்த யானைக் கூட்டம் அங்கு பெரும் பொருள் சேதங்களை ஏற்படுத்தியது. சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சொத்துக்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, யானைகளை பத்திரமாக காட்டிற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். யானைகள் தங்கள் வனப்பகுதிக்கு செல்வதற்கு 300 மைல் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. எனவே, யானைக் கூட்டம் மக்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் குறிப்பிட்ட இடைவெளி விட்டு யானைகளை பெரிய வாகனங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். யானைகளால் பொதுச்சொத்துகளுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க, வனத்துறை சார்பில் வழியில் ஆங்காங்கே தொட்டிகள் அமைக்கப்பட்டு உணவும், தண்ணீரும் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சீன அரச தொலைக்காட்சி ஒன்று யானைகள் வனத்திற்குள் அனுப்பப்படும் நிகழ்வை 24 மணி நேரமும் நேரலையாக வழங்கி வருகிறது. இலட்சக்கணக்கான சீன மக்கள் இதனை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், வனத்திற்குள் செல்லும் வழியில் 15 யானைகளும் அழகாகப் படுத்து உறங்கும் காட்சி 'ட்ரோன் கெமரா' மூலம் படம் பிடிக்கப்பட்டது. அந்தப் புகைப்படம் தற்போது உலக அளவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.