ஜனாதிபதியை சந்திக்கும் துறைமுக நகர ஆணைக்குழு

துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு

by Staff Writer 10-06-2021 | 8:59 AM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று (10) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளனர். ஆணைக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய, நியமிக்கப்படவுள்ள உயர் பதவிகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. அனைத்து பதவிகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழு முழுமையாக செயற்படும் என ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன குறிப்பிட்டார். குறித்த ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அங்கு முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்நாட்களில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 31 ஆம் திகதி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்தார். ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் தலைமையிலான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் மேலும் ஆறு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர். திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்துவிக்ரம, இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர் சாலிய விக்ரமசூரிய, ஓரல் கோப்பரேஷனின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான குஷான் கொடித்துவக்கு, மெர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட் என்ட் ( & ) பினான்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஜெராட் ஒன்டச்சி, மெக்லரன்ஸ் குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரொஹான் டி சில்வா ஆகியோர் துறைமுக நகர ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஏனைய செய்திகள்