வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அமைதியின்மை

தடுப்பூசி ஏற்றுவதில் தகராறு: வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அமைதியின்மை

by Staff Writer 09-06-2021 | 10:30 PM
Colombo (News 1st) தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையால் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது. வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களைத் தவிர சுகாதார ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு AstraZeneca தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தை ஏற்றுவது தொடர்பாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு நடைமுறைப்படுத்தப்படாமையால், இன்று அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. வைத்தியசாலையில் எஞ்சியிருந்த 22 AstraZeneca மருந்துக்குப்பிகளை தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்றுவதற்கு வைத்தியசாலை அதிகாரிகள் உடன்பட்டிருந்ததாக வைத்தியசாலையின் ஊழியர்கள் குழு தெரிவித்தது. இதனிடையே, அந்தத் தடுப்பூசிகளை நேற்று அவசரமாக எடுத்துச்செல்வதற்கு சுகாதார அமைச்சு முயற்சித்துள்ளது. எனினும், அதற்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை அடுத்து இன்று காலை சுகாதார ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்ற இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த இணக்கப்பாட்டை அதிகாரிகள் மீறியதாக சுகாதார ஊழியர்கள் குழு குற்றம் சாட்டியது. வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத சிலருக்கு இரகசியமாக AstraZeneca தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தை ஏற்ற கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் குழு தெரிவித்தது.