by Staff Writer 09-06-2021 | 4:30 PM
Colombo (News 1st) இணையத்தளங்களில் போலியான செய்திகளை வௌியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஜீவ் யசிரு குருவிட்டகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் அவரை விடுதலை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் இன்று (09) உத்தரவிட்டார்.
போலியான தகவல்களை இணையத்தளமூடாக பகிர்ந்த குற்றச்சாட்டில் இவர் நேற்றைய தினம் (08) கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி செயலகம் அல்லது ஏனைய அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையதளங்கள் சந்தேகநபரால் ஊடுருவப்பட்டுள்ளதா என இன்றைய வழக்கு விசாரணையின் போது விசாரணை அதிகாரிகளிடம் நீதவான் வினவினார்.
ஜனாதிபதி செயலகம், வௌிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக சந்தேகநபரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.