மரக்கறியை பெற்று அரசினூடாக விநியோகிக்க அனுமதி 

மரக்கறி, பழங்களை கொள்வனவு செய்து இலவசமாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி 

by Staff Writer 08-06-2021 | 11:18 AM
Colombo (News 1st) பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் விற்பனை செய்ய முடியாத மேலதிக மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்து, அரசாங்கத்தினூடாக விநியோகிக்கும் திட்டத்தை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாய அமைச்சரினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. தங்களின் உற்பத்திகளை விற்பனை செய்துகொள்ள முடியாமையால் சிறு, நடுத்தர மற்றும் பாரியளவில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உரிய விலைக்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோருக்கும் முடியாது போயுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலதிக மரக்கறிகள் மற்றும் பழங்களை மாவட்ட, பிரதேச செயலகங்கள், கிராமிய குழுக்களூடாக விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் லேமதிக உற்பத்திகளை, கொவிட் - 19 சிகிச்சை நிலையங்கள், அரச வைத்தியசாலைகள், முப்படைக்கான தளங்கள், இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.