காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 வருட சிறைத்தண்டனை

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

by Bella Dalima 08-06-2021 | 7:39 PM
Colombo (News 1st) மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி வழக்கில் தென்னாபிரிக்க நீதிமன்றம் அவருக்கு எதிராக இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. காந்தியின் கொள்ளுப்பேத்தி ஆஷிஷ் லதா ரம்கோபின் (56), S.R.மகாராஜ் என்ற ஆடை தயாரிப்பு நிறுவன அதிபரிடம் 6.2 மில்லியன் ரூபா பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து கைத்தறி பொருட்கள், துணி வகைகளை வரவழைத்துக் கொடுப்பதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் பணம் பெற்றுக்கொண்டதாக ஆஷிஷ் லதா ரம்கோபின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர் அளித்த ஆவணங்கள் மோசடியானவை என தெரியவந்துள்ளது. காந்தியின் கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் சிலர் மனித உரிமை செயற்பாட்டாளர்களாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகவும் உள்ளனர். லதா ராம்கோபினுடைய உறவினர்களான கீர்த்தி மேனன், மறைந்த சதீஷ் துபேலியா, உமா துபேலியா மெஸ்த்ரின் ஆகியோரும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள். லதா ராம்கோபினின் தாய் இலா காந்தி, சுற்றுச்சூழல், மனித உரிமை விவகாரங்களில் குரல் கொடுத்தவர் என்பதற்காக தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் உலகின் பல அரங்குகளில் கெளரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.