சேதனப் பசளை தொடர்பில் மக்கள் தெளிவூட்டப்படுவதில்லை

சவால்களை பொருட்படுத்தாது சேதனப் பசளை பயன்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 08-06-2021 | 10:26 PM
Colombo (News 1st) சேதனப் பசளையை பயன்படுத்துவது சிறந்த தீர்மானம் என்பதால், சவால்களை பொருட்படுத்தாது அதனை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களை நேற்று (07) சந்தித்தபோது தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது,
இந்த வருடத்திற்கு தேவையான உரத்தை அனைவரும் இறக்குமதி செய்துள்ளனர். சேதனப் பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளும் தேயிலை செய்கை உள்ளது. அதற்கு உண்மையிலேயே சிறந்த விலையும் கிடைக்கின்றது. இது குறித்து மக்கள் தெளிவூட்டப்படுவதில்லை. கஷ்டங்கள் இருக்கும். ஆனால் செய்ய முடியாது விடயம் அல்ல. இது உலகமே அங்கீகரித்த சிறந்த நடவடிக்கை. எமது எதிர்கால சந்ததியினருக்காக அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதேவேளை, சேதனப் பசளை பயன்பாடு தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகே இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது,
விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்கி 30,000 ரூபாவை செலுத்தி தமது வயலுக்குத் தேவையான பசளையை தயாரித்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளோம். அத்துடன், சிறியளவிலான மற்றும் பாரியளவிலான சேதனப் பசளை உற்பத்தியாளர்கள் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளனர். மூன்று அரச நிறுவனங்கள், கூட்டுறவு திணைக்களம், காணி மறுசீரமைப்பு சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் இதில் தொடர்புபடுகின்றன. எனவே, விவசாயிகளுக்கு தேவையான உரத்தை உரிய நேரத்தில் வழங்குவதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்பதனை கூற விரும்புகிறேன். தற்போதும் 20 நிறுவனங்கள் சேதனப் பசளையை நாட்டிற்கு இறக்குமதி செய்கின்றன. சிலவேளை எமக்கு அதனை இறக்குமதி செய்வதற்கான தேவை ஏற்பட்டால், அது தொடர்பில் ஆராய்வதற்கு புத்திஜீவிகள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை அரசியலாக்க வேண்டாம் என நாம் எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏனைய செய்திகள்