by Staff Writer 07-06-2021 | 10:38 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை அனைத்து வணிக வங்கிகளுக்கும் அனுமதி பெற்ற விசேட தேவைகளுக்கான வங்கிகளுக்கும் இன்று சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வங்கிகளை திறந்து வைப்பதற்கான அனுமதி மற்றும் ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமிருந்து மத்திய வங்கி பெற்றுக்கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வணிக வங்கிகள் மற்றும் அனுமதிபெற்ற வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவையினை தடையின்றி தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ATM மூலமாக பணம் பெறுவதற்கும் வைப்பிலிடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியதுடன், அத்தியாவசிய விடயங்கள் குறித்து வினவுவதற்கு வங்கிகள் விசேட தொலைபேசி இலக்கமொன்றை வழங்க வேண்டும் எனவும் டிஜிட்டல் வங்கிச் சேவையை செயற்படுத்துவது அவசியம் எனவும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
இதனைத் தவிர நிதி செயற்பாடுகள், திறைசேரி செயற்பாடுகள், ஓய்வூதியம், சம்பளம் வழங்குதல் போன்ற செயற்பாடுகளை வங்கிகள் முன்னெடுக்க முடியும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஸ்மனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் ஒரு வார காலத்திற்கு வாடிக்கையாளர்களுக்காக வங்கிகள் திறக்கப்பட மாட்டாது என தனியார் வணிக வங்கிகள் சில தமது உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பதிவிட்டிருந்தன.