மட்டக்களப்பில் கொரோனாவால் கர்ப்பிணி உயிரிழப்பு

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் 5 கொரோனா மரணங்கள்; 7 மாத கர்ப்பிணியும் உயிரிழப்பு 

by Bella Dalima 07-06-2021 | 11:02 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 94 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கே.பி.சி பகுதியில் இருவர் இறந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் 36 வயதான 7 மாத கர்ப்பிணி என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள முதலாவது கர்ப்பிணி மரணம் இதுவென அவர் குறிப்பிட்டார். வயிற்றிலிருந்த குழந்தையும் இதன்போது உயிரிழந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 44 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 3622 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாளை (08) 25,000 தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக மாவட்டத்தின் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார். முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமையளிக்கப்படும் என கே. கருணாகரன் மேலும் தெரிவித்தார்.