மெக்ஸிக்கோவில் வயலில் திடீரென தோன்றிய பள்ளம்

மெக்ஸிக்கோவில் வயல் நிலத்தில் திடீரென தோன்றிய 328 அடி அகலமான பள்ளம்

by Bella Dalima 05-06-2021 | 6:31 PM
Colombo (News 1st) மெக்ஸிக்கோவின்  பியூப்லா மாகாணத்தில் உள்ள Santa Maria Zacatepec என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென மிகப்பெரிய பள்ளம் (Sinkhole) தோன்றியுள்ளது.
விண்கலம் தரையில் வீழ்ந்தால் ஏற்படக்கூடிய அளவில் பள்ளம் பெரிதாக தென்படுகிறது.
திடீரென  வயல் நிலத்தில் சுமார் 328 அடி அகலமும் 65 அடி ஆழமும் கொண்ட பள்ளம் உருவானதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எந்த நேரத்திலும் பள்ளம் பெரிதாகலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
திடீரென நிலம் உள்வாங்கியதால்,  பூகம்பம் ஏற்படப்போகிறது என்று பயந்த மக்கள் அந்தப் பகுதியை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
பள்ளம் ஏற்படுவதற்கு முன்னதாக இடி இடித்ததைப் போன்று சத்தம் கேட்டதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பள்ளத்தில் நீர் நிரம்பி மிகப்பெரிய கிணறு போல் காட்சியளிக்கிறது.
குறித்த இடத்தில் பூமிக்குள் பாறைகள் குறைவாகக் காணப்பட்டாலும் திடீரென நீரோட்டம் ஏற்பட்டாலும் இவ்வாறு திடீரென நிலம் கீழிறங்கி பள்ளம் தோன்றும் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Sinkhole என்று அழைக்கப்படும் இத்தகைய பள்ளமானது பூமியின் மேற்பாறைகளை நீரோட்டம் கரைப்பதால் ஏற்படுகிறது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.