மேலும் 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை

மேலும்  28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது

by Bella Dalima 04-06-2021 | 4:12 PM
  Colombo (News 1st) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் 28 சீன நிறுவனங்கள் மீது தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பு அல்லது ஜனநாயக மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அடக்குமுறை அல்லது கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பயன்படுத்தப்படும் சீன கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் போது அமெரிக்காவில் சீன செயலிகள் பல தடை செய்யப்பட்டன. பாதுகாப்பு கருதி ஹேக்கிங் முறைகேட்டில் ஈடுபடும் சீன செயலிகள் அமெரிக்காவில் இயங்கத் தடை விதிக்கப்பட்டது.
சீனாவின் பெருநிறுவனங்களான சீனா மொபைல், ஹிக்விஷன், சீனா ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் ட்ரம்பின் உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமெரிக்க பங்குச் சந்தையில் சீன நிறுவனங்கள் பல கடும் நஷ்டத்தை இதனால் சந்திக்க நேரிட்டது.
இந்நிலையில், தற்போதைய அதிபரும் 28 சீன நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளார்.