மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 04-06-2021 | 10:13 AM
Colombo (News 1st) சீரற்ற வானிலையால், 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. அதற்கமைய, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, கலவான, அயகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, கிரிஎல்ல, குருவிட்டை, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசங்களை தவிர்ந்த அதிகூடிய மழைவீழச்சி பதிவாகக்கூடிய ஏனைய பகுதிகளில் வசிக்கும் மக்களும் மண்சரிவு அபாயம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, களுத்துறை பகுதியில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல், வட மேல் ,சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற வானிலையால், தப்போவ நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகளும் தெதுருஓயாவின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளனன.

ஏனைய செய்திகள்