ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து

ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து; போர்க்கப்பலும் தீப்பிடித்து கடலில் மூழ்கியது 

by Bella Dalima 04-06-2021 | 3:46 PM
Colombo (News 1st)  ஈரான் தலைநகா் டெஹ்ரானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தால், அந்த ஆலை தொடர்ந்து எரிந்து வருகிறது. தெற்கு டெஹ்ரானில் உள்ள ஈரான் அரசுக்கு சொந்தமான டான்கூயன் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் புதன்கிழமை (02) திடீா் தீவிபத்து ஏற்பட்டது. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரா்கள் கடுமையாக முயன்றும் இரண்டாவது நாளாக அந்த ஆலையில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதன் காரணமாக, டெஹ்ரான் வானில் கரும்புகை சூழ்ந்தது. சுத்திகரிப்பு ஆலையிலுள்ள இரண்டு கழிவுத் தொட்டிகளில் கசிவு ஏற்பட்டதன் விளைவாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது என எண்ணெய் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், அந்தக் கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்ற விபரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஈரானின் மிகப்பெரிய போா்க் கப்பல் ஓமன் வளைகுடாவில் மா்மமான முறையில் எரிந்து புதன்கிழமை மூழ்கிய நிலையில், அந்த நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலும் ஏற்பட்டுள்ள தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் கடற்படைக்கு சொந்தமான காா்க் என்ற கப்பலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீப்பிடித்தது. 207 மீட்டா் நீளம் கொண்ட அந்தக் கப்பல்தான் ஈரானின் மிகப்பெரிய போா்க் கப்பலாகும். அந்தப் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள பிற கப்பல்களுக்குத் தேவையான பொருட்களை விநியோகிக்கும் பணியில் காா்க் கப்பல் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஓமன் வளைகுடா பகுதியில் சரக்குக் கப்பல்களில் மா்மமான முறையில் வெடி விபத்துகள் ஏற்பட்டதற்கு ஈரானின் சதிச் செயல்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனை ஈரான் மறுத்தாலும், அந்த நாட்டின் எம்.வி. சாவிஸ் கப்பலைக் குறிவைத்து மா்மத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானின் மிகப் பெரிய போா்க் கப்பல் மா்மமான முறையில் தீப்பிடித்து மூழ்கியுள்ளதுடன் தற்போது அந்த நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.