இளைஞரின் மரணத்திற்கு போதைப்பொருள் பாவனையே காரணம்

மட்டக்களப்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: அதிக போதைப்பொருள் பாவனையே காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி

by Staff Writer 03-06-2021 | 11:10 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருதயபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சில மணித்தியாலங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர். எவ்வாறாயினும், இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். தமது மகனுக்கு பொல்லால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்ததாகவும் இளைஞரின் பெற்றோர் தெரிவித்தனர்.   இந்நிலையில், மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்தமைக்கு அதிக போதைப்பொருள் பாவனையே காரணம் என பிரேத பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது. உடலில் சிறு காயங்கள் காணப்பட்ட போதிலும், அதிக போதைப்பொருள் பாவனையே உயிரிழப்பிற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அரசரட்ணம் இளங்கோவன் தெரிவித்தார்.