தபால் நிலையங்கள் இன்று (03) முதல் மீள திறப்பு

தபால் நிலையங்களை இன்று (03) முதல் மீள திறக்க தீர்மானம்

by Staff Writer 03-06-2021 | 9:53 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் ஆகியவற்றை இன்று (03) முதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம் மாதத்திற்குரிய கொடுப்பனவுகளை செலுத்துதல் மற்றும் ஔடத பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய கடமைகளுக்காக தபால் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள செல்வோர், கொடுப்பனவு அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டை ஆகியவற்றை பாதுகாப்பு தரப்பினரிடம் காண்பித்ததன் பின்னர் தபால் நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். இதேவேளை, வீடுகளில் உள்ள நோயாளர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சைகளூடாக விநியோகிக்கப்படும் மருந்துகளை பகிர்ந்தளிக்கும் பணிகளும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலணியின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பான சிக்கல்கள் காணப்படுமாயின் 1950 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.