யாழில் விருந்துபசாரம் நடத்தியோருக்கு விளக்கமறியல்

யாழ். அரசடியில் விருந்துபசாரம் நடத்திய ஐவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 01-06-2021 | 8:47 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அரசடி பகுதியில் சட்டவிரோதமாக விருந்துபசாரம் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி விருந்துபசாரம் நடத்தியமை தொடர்பில் சந்தேகநபர்கள் நேற்று (31) காலை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுடன் பழகியவர்களையும் தனிமைப்படுத்துமாறு சுகாதார தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.