மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இங்கிலாந்து

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இங்கிலாந்து: விஞ்ஞானி ரவி குப்தா எச்சரிக்கை

by Bella Dalima 01-06-2021 | 4:22 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இங்கிலாந்து உள்ளதாக தொற்று நோய் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கி வரும் புகழ்பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரவி குப்தா, அரசின் புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாச வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் பாதிப்பில் இருப்பதாகவும், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் முக்கால்வாசிப் பேரின் உடலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், புதிய பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேக வளர்ச்சியைத் தூண்டி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிச்சயமாக பாதிப்பு எண்ணிக்கை இந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. எல்லா அலைகளும் குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகளின் பின்னணியில் தொடங்கி பின்னர் வெடிப்பாக மாறுகின்றன. எனவே, இங்கே முக்கியமானது நாம் இங்கே பார்ப்பது மூன்றாவது அலையின் ஆரம்ப அறிகுறிகளாகும்
என ரவி குப்தா குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜூன் 21 ஆம் திகதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவை சில வாரங்களுக்கு தாமதப்படுத்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சனை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.