உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது 

உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு பெயரிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்

by Bella Dalima 01-06-2021 | 3:53 PM
Colombo (News 1st) இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர்களை அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளன. B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே, வைரஸ்கள் அல்லது திரிபடைந்த வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக்கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரஸிற்கு டெல்டா என பெயரிட்டுள்ளது. இதேபோல், பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனாவிற்கு ஆல்பா எனவும், தென் ஆபிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனாவிற்கு பீட்டா எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகைக்கு காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவிற்கு எப்சிலான் எனவும் உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.