மேலும் 5 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

by Staff Writer 26-05-2021 | 2:44 PM
Colombo (News 1st) சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. ஶ்ரீலங்கன் விமான சேவையின் UL 869 விமானத்தினூடாக சீனாவிலிருந்து இந்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்போது, இலங்கைக்கான சீன தூதுவர், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஸ, பிரசன்ன ரணதுங்க மற்றும் D.V. சாணக்க ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இலங்கைக்கு 2 மில்லியன் தடுப்பூசிகளை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் வழங்கவுள்ளதாக சீன தூதுவர் தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார். இதனை தவிர, நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்வரும் நாட்களில் ரஷ்யாவின் Sputnik v தடுப்பூசிகளும் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன. இதனிடையே, சீனாவில் தயாரிக்கப்படும் Sinovac தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார். இதன் பிரகாரம், எதிர்வரும் 2 மாதங்களில் சீனாவுடன் இணைந்து Sinovac தடுப்பூசியை தயாரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குண்டசாலையிலுள்ள தொழிற்சாலையில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் குறிப்பிட்டார்.