விளைந்து கிடக்கும் கொடித்தோடைகள்; விற்பனைக்கு இடையூறாகவுள்ள பயணத் தடை

by Staff Writer 26-05-2021 | 5:40 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - அக்கராயன் குளத்தில் பெருமளவிலானவர்கள் கொடித்தோடை செய்கையை தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். நவீன விவசாய செயற்றிட்டத்தின் கீழ் கொடித்தோடை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அக்கராயன்குள விவசாயிகளுக்கு கொடித்தோடை கன்றுகளும் நீர்ப்பாசன உபகரணங்களும் விவசாயத் திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. தற்போதைய பயணத் தடையால் தமது உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாத நிலையில், உற்பத்திகள் அழிவடைவதாக விவசாயிகள் தெரிவித்தனர். கொடித்தோடைக்கு மக்கள் மத்தியில் கேள்வி நிலவுகின்ற போதிலும் போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தலில் தாம் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர் இந்த செய்கைக்காக பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ள நிலையில், தமது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகவுள்ளது. வவுனியா வடக்கு பகுதியில் அனந்தர் புளியங்குளம் மற்றும் சின்ன பூவரசங்குளம் பகுதிகளில் பெருமளவில் கொடித்தோடை செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. தற்போது அறுவடைக்காலத்தில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையால் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கொடித்தோடை செய்கையாளர்கள் கவலை வௌியிட்டனர். பயணத்தடையால் தெற்கிலிருந்து கொடித்தோடையை கொள்வனவு செய்வதற்காக வர்த்தகர்கள் வருவதில்லை எனவும் அவர்கள் கூறினர். ஒரு கிலோகிராம் கொடித்தோடையின் விலை 150 முதல் 200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவற்றை 40 ரூபாவிற்குக் கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.