இன்றிரவு 11 மணி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு

இன்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு

by Staff Writer 25-05-2021 | 2:52 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணி முதல் 19 மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்றிரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு அன்றிரவு 11 மணி தொடக்கம் ஜூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். மக்களின் தேவை கருதியே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாகவும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார். மக்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே ஒரு சில நாட்களுக்கு பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாட்களில் வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் வௌியில் சென்று, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்தார். பிரதேச செயலாளர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் மருந்தகங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டார். வாகனங்களில் பயணிக்காது, நடந்து செல்லக்கூடிய தூரத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வங்கிச் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறைந்தபட்ச ஆளணியைக் கொண்டு வங்கிச் சேவையை முன்னெடுக்க வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தினார். இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் தங்களின் கிராமத்தை விட்டு வௌியில் செல்ல முடியாது என இராணுவத் தளபதி குறிப்பிட்டார். இதேவேளை, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் ஆடை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட ஆடம்பர தேவைகளுக்கான வர்த்தக நிலையங்கள் திறக்கப்படக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். மரக்கறி, மீன் கடை, இறைச்சிக் கடை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு மாத்திரமே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனிடையே, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நடமாடும் வர்த்தக சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. நடமாடும் வர்த்தக சேவைக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்தல் போதுமானது என துறைசார் அமைச்சு அறிவித்துள்ளது.