திருகோணமலையில் வடிகாணில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

by Staff Writer 24-05-2021 | 6:47 PM
Colombo (News 1st) திருகோணமலை, தம்பலகாமம் - சிராஜ்நகர் பகுதியில் வடிகாணில் தவறி வீழ்ந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. இன்று பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமற்போனதை அடுத்து, உறவினர்கள் குழந்தையை தேடியுள்ளனர். இதன்போது, வடிகாணில் வீழ்ந்திருந்த குழந்தையை கண்டவர்கள் குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், குழந்தை உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.