அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் உறுப்புரிமை தற்காலிகமாக நீக்கம்

by Staff Writer 22-05-2021 | 2:43 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையிலிருந்து தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற கட்சியின் உயர்மட்ட கூட்டத்தின் போது, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பதில் தலைவர் சட்டத்தரணி எம்.என். ஷஹீட் தெரிவித்தார். எனினும், அதனை மீறி புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் இஷாக் ரஹ்மான் ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார். எனவே, அவர்களை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக நீக்குவதற்கு தாம் தீர்மானித்ததாக அவர் கூறினார். தனது தீர்மானம் கட்சியின் அரசியல் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவர் சட்டத்தரணி எம்.என். ஷஹீட் மேலும் தெரிவித்தார்.