கைது செய்யும் நடவடிக்கை கடுமையாக பின்பற்றப்படும்

சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கை கடுமையாக பின்பற்றப்படும்: பிரதி பொலிஸ்மா அதிபர்

by Staff Writer 22-05-2021 | 2:21 PM
Colombo (News 1st) பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இதற்காக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணத் தடை , 19 மணித்தியாலங்களின் பின்னர் அன்றிரவு 11 மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரவுள்ளது. அதற்கிணங்க அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வரும் நாடளாவிய ரீதியிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4 மணி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனிடையே, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் 65 பேரும் மாத்தளையில் 98 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 11,743 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை வரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். வீதித்தடைகள், நடமாடும் பொலிஸ் சுற்றிவளைப்பு, மோட்டார் சைக்கிள்களினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்