சரக்கு கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

X-Press Pearl சரக்கு கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

by Staff Writer 21-05-2021 | 4:05 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்திற்கு வௌியில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலொன்றில் பரவிய தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினரும் துறைமுக அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். X-Press Pearl என்ற சரக்கு கப்பலொன்றிலேயே தீ பரவியுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து வட மேற்காக 9.5 கடல் மைல் தொலைவில் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். இரசாயனப் பொருட்களை கொண்டு சென்ற போதே கப்பலில் தீ பரவியதாக அவர் கூறினார். இந்தியாவின் ஹஷீரா துறைமுகத்திலிருந்து பயணித்த குறித்த கப்பலானது சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 25 தொன் நைட்ரிக் அசிட், இரசாயன பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுடன் 1,486 கொள்கலன்கள் உள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். 25 அதிகாரிகள் கப்பலில் பயணித்துள்ளனர்.