கல்குடாவில் கைதான 10 பேருக்கு விளக்கமறியல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கைதான 10 பேருக்கு விளக்கமறியல்

by Staff Writer 21-05-2021 | 4:21 PM
Colombo (News 1st) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மட்டக்களப்பு - கல்குடாவில் கைது செய்யப்பட்ட 10 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களை இன்று ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 10 சந்தேகநபர்களும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக கால அவகாசம் தேவை என பொலிஸார் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், அவர்களுக்கான பிணை வழங்குவதற்குரிய அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடையாது. இதனால், தமது சேவை பெறுநர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யவுள்ளதாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை நினைவுகூர முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 18 ஆம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர். வாழைச்சேனை, கல்குடா, கிரான் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.