பயணக் கட்டுப்பாட்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை முன்வைத்தார் ஜனாதிபதி

by Staff Writer 21-05-2021 | 7:58 PM
Colombo (News 1st) இன்று (21) இரவு முதல் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் போது மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. COVID ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் ஜனாதிபதி, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தௌிவுபடுத்தியுள்ளார். பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் நாட்களுக்கு முன்தினம் பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கல், விவசாய நடவடிக்கைகள், நகரங்களில் கழிவகற்றல் நடவடிக்கைகள், வீதி அபிவிருத்தி மற்றும் ஏனைய நிர்மாணப் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார். அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் போது நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அந்த நோயாளி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை குறித்த நிறுவனத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளின் வசதிகளையும் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் விசேட நிபுணர்களின் ஆலோசனைகளின் படியே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும், மக்கள் சார்பில் எந்தவொரு தீர்மானத்தை எடுக்கவும் பின்வாங்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்