கொடுப்பனவு வௌியீடு: கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி

கொடுப்பனவு விபரங்கள் வௌியீடு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி

by Staff Writer 21-05-2021 | 6:48 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு அண்மையில் வௌியிட்ட கொடுப்பனவு விபரங்களால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களால் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதியான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமரத்ன இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய நாடுகளில் சம்பாதிக்கும் வீரர்களின் வருமானத்தை வௌியிடாது, கிரிக்கெட் வீரர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் மாத்திரம் தகவல் வௌியிட்டமை குறித்து வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் சர்வதேச தரப்படுத்தலின் போது இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளமையை ஏற்றுக்கொள்வதாகவும், அதன் முழுமையான பொறுப்பு வீரர்களுடையது என கூற முடியாது எனவும் சட்டத்தரணியால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தினரும் ஏனைய பங்குதாரர்களும் விளையாட்டுடன் தொடர்புடையவர்கள் என சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமரத்ன வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.