ரயில் சேவை இரத்து; பஸ் சேவை மட்டுப்படுத்தல்

இன்று நள்ளிரவு முதல் பயணிகள் ரயில் சேவை இரத்து; பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

by Staff Writer 21-05-2021 | 3:18 PM
Colombo (News 1st) இன்று (21) நள்ளிரவு முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 28 ஆம் திகதி ரயில் சேவையை முன்னெடுப்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார். ரயில்வே பொது முகாமையாளர் மற்றும் துறைசார் அமைச்சரின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையும் பஸ் சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. எனினும், இந்த காலப்பகுதியில் வைத்தியசாலை பணிகளில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் 250 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக சுவர்ணஹங்ச குறிப்பிட்டார். பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும்பட்சத்தில் தேவையான அளவு பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.