துறைமுக நகர சட்டமூலம் மீதான இரண்டு நாள் விவாதம் இன்று ஆரம்பம் 

by Staff Writer 19-05-2021 | 7:59 AM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம் நாளையும் (20) இடம்பெறவுள்ளது. கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகரால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில், சட்டமூலத்தின் 25 சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவையாக காணப்படுகின்றன. 9 சரத்துகளை அதே அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியமென உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. அரசியலமைப்பிற்கு உட்பட்ட சரத்துகளை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையெனவும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள திருத்தங்களை துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் உள்ளடக்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.