நோய் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களை அவரவர் வீடுகளில் வைத்து கண்காணிக்க நடவடிக்கை

by Staff Writer 15-05-2021 | 4:46 PM
Colombo (News 1st) நோய் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் வீடுகளிலேயே தங்கவைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. PCR அறிக்கையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட, அறிகுறிகள் தென்படாதவர்களை அவரவர் வீடுகளில் தங்கவைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இவர்களை கண்காணிக்க வைத்தியர் குழுவொன்று ஈடுபடுத்தப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மாத்திரம் அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவார்களென அவர் கூறினார். இந்த நடவடிக்கையினூடாக அனைத்து கொரோனா நோயாளர்களையும் கண்காணிப்பதற்கும் அவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டினார்.