சட்டவிரோத கடலட்டை பண்ணையை அகற்ற நடவடிக்கை

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்ற நடவடிக்கை

by Staff Writer 15-05-2021 | 2:52 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த நடவடிக்கை மூலம் இரண்டு கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையிலான முரண்பாடு சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார். கடலட்டை பண்ணை தொடர்பில் கிராஞ்சி மற்றும் வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்ததாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு சங்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கடற்றொழில் அமைச்சர் பண்ணை அமைந்திருந்த இடத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, இரண்டு தரப்பினருக்கும் இடையில் சமரசத்தினை ஏற்படுத்தியதோடு, சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கடலட்டைப் பண்ணைகளை அகற்றுமாறும், ஏற்கனவே அறுக்கப்பட்ட வலைகளை உரியவரிடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த கடலட்டை பண்ணையை அங்கு அமைத்திருந்தவர்களுக்கு பொருத்தமான வேறு இடத்தினை தெரிவு செய்து வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.