சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழப்பு

by Staff Writer 14-05-2021 | 8:25 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவிய வானிலை மாற்றத்தினால் சில அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல - தொரவக்க பகுதியில் இன்று மாலை மண்சரிவு ஏற்பட்டது. அத்துடன், குறித்த பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தங்களினால் சுமார் 100 வீடுகள் வரை முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வரக்காபொல - தஸ்னாவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 54 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சியஒலாகெலே பகுதியை சேர்ந்த 53 வயதான ஒருவர் வாரியபொல - மகுருஓயாவில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். கடும் மழையை அடுத்து காலி - நாகியாதெனிய பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 31 வயதானவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். ஹற்றன் கினிகத்தேன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மூவர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.