சட்டவிரோதமாக புலம்பெயர முயன்ற 30 பேர் சிலாபத்தில் கைது

by Staff Writer 14-05-2021 | 2:39 PM
Colombo (News 1st) நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக புலம்பெயர்வதற்கு முயன்ற 30 பேர் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். சிலாபம் சமிந்துகம பகுதியில் நேற்று முன்தினம் (12) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடல் மார்க்கமாக வௌிநாடுகளுக்கு செல்ல தயாராகியிருந்த 14 பேரும், அவர்கள் தங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் பொலிஸார் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினருடன் இணைந்து நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கடல் மார்க்கமாக செல்ல முயற்சித்தவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர் அடங்கலாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.