பிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: பிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை

by Bella Dalima 14-05-2021 | 3:43 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி Jair Bolsonaro-விற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரேசிலின் செனட் சபையினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார தரப்பினரால் முன்மொழியப்பட்ட திட்டங்களை நிராகரித்தமை மற்றும் தடுப்பூசிகள் கொள்வனவை நிறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. பிரேசிலின் சுகாதார உட்கட்டமைப்புகள் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொரோனா தொற்றினால் 4 ,30,000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலேயே, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பிரேசிலில் 1 கோடியே 54 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டை முடக்கும் எண்ணமில்லை என அந்நாட்டு ஜனாதிபதி தொடர்ச்சியாக கூறி வந்தார். நாட்டை முடக்கும் பட்சத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். நேற்று மாத்திரம் அங்கு 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்படிருந்தனர்.