இலங்கை முஸ்லிம்களின் நல்லெண்ணங்கள் ஈடேற வேண்டும்

இலங்கைவாழ் முஸ்லிம் மக்களின் அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும்: ஜனாதிபதி வாழ்த்து 

by Staff Writer 14-05-2021 | 2:47 PM
Colombo (News 1st) ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் வாழ்த்துச் செய்தியினை வௌியிட்டுள்ளனர். ஈதுல் பித்ர் நன்னாளில் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களின் அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் இன்று எதிர்கொள்ளும் COVID பேரழிவில் இருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். நோய்த்தொற்று நிலைமைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரார்த்தனைக்காக ரமழான் காலத்தைப் பயன்படுத்திக்கொள்வது பயனுடையது எனவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சமூகங்களுக்கு இடையில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பி உலகுக்கு தாம் எடுத்துக்காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் சிறந்த முன்னுதாரணம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புனித அல் குர்ஆனின் போதனைகளைப் பின்பற்றும் உண்மையான முஸ்லிம்கள் கூட்டு அர்ப்பணிப்பையும் திட உறுதியையும் மேலும் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளை, நோன்புக் காலத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, வழிபாட்டிற்காக பள்ளிவாசல்களுக்கு செல்லாது தமது வீடுகளில் இருந்தவாறு சமய சடங்குகளை மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்ட அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பிரதமர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார். முழு உலகமும் இவ்வாறானதொரு தொற்று நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள காலத்தில் ரமழான் நோன்பின் மூலம் அர்த்தப்படுத்தப்படும் மத விழுமியங்களை அனைவரின் நலனுக்காக பயன்படுத்துமாறும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியூடாக மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். உங்கள் அனைவருக்கும் இன்றைய ஈதுல் ஃபித்ர் திருநாள் இறை ஆசீர்வாதத்துடனான, நோய் அச்சமற்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சிறந்த நாளாக அமைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். மத ரீதியான முறையான போதனைகளைக் கற்ற, ஒழுக்கம் மிகுந்த இஸ்லாமியர்கள் வரலாறு முழுவதும் இலங்கை சமூகத்தில் பிற இனங்கள் மற்றும் மதங்களுடன் ஒருவருக்கொருவர் மிகுந்த நட்புடன் செயற்பட்டுள்ளனர். இந்த நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் முன்னோக்கி செல்ல முஸ்லிம் மக்களுக்கு உள்ள அவசியத்தை ஒரு அரசாங்கமாக தாம் புரிந்துகொண்டுள்ளதை இன்று போன்றதொரு தினத்தில் நினைவுபடுத்துவதாகவும், ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.