நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

by Chandrasekaram Chandravadani 13-05-2021 | 10:23 AM
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென் மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுக, மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுக, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 இலிருந்து 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இந்தநிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி மத்துகம - அஹலவத்த (172.5mm) பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.