இந்திய மீனவர் படகிலிருந்து 70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

by Staff Writer 08-05-2021 | 4:37 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கப்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் 522 கிலோகிராம் விதை வெங்காயம் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேல் மற்றும் வடமேல் கடற்பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. புத்தளம் - குதிரைமலை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர் படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, 118 பைகளில் பொதியிடப்பட்டிருந்த 235 கிலோகிராமிற்கும் அதிக கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. அத்துடன், குறித்த படகிலிருந்த 07 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 70 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமென கடற்படை தெரிவித்தது. எவ்வாறாயினும், COVID-19 நிலைமையை கருத்திற்கொண்டு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட 07 மீனவர்களை இந்திய கடற்பரப்பிற்கு திருப்பியனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை மேலும் குறிப்பிட்டது. இதேவேளை, நீர்கொழும்பு கடற்பரப்பிலிருந்து கரைக்கு வர முயன்ற டிங்கி படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, 20 பைகளில் பொதியிடப்பட்டிருந்த சுமார் 522 கிலோகிராம் விதை வெங்காயத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட விதை வெங்காயத் தொகையையும் டிங்கி படகையும் சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்தது.